ஈழத்துப் பறை: மீட்டெடுத்தலும் கொண்டாடலும் வேண்டி…! | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன்
Description
2017இல் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்குகின்ற கலையார்வலர் குழுவொன்று தென்னிந்திய ‘பறை’ வாத்தியத்தை யாழ்ப்பாணத்திலும் இலங்கைத் தீவின் வேறு சில பிராந்தியங்களிலும் உள்ள ஆர்வலர்களுக்கு பயிற்றுவித்தது. இதற்காக தமிழகத்திலிருந்து ‘பறை’ வாசிக்கும் ஒரு குழுவினர் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். மேற்படி ‘பறை’ வாத்தியக் கருவி இலங்கையில் வாசிக்கப்படும் பறை மேள வடிவத்திலிருந்து மாறுபட்ட ஒன்று. இந்தக் கருவி இலங்கையில் மலையக மக்களிடம் பாவனையில் உள்ளது. அங்கு அது ‘தப்பு வாத்தியம்’ என்கின்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. அதனை ஒட்டிய நடனம்’ தப்பாட்டம்’ என அழைக்கப்படுகிறது. அதேவேளை மேற்படி வாத்தியத்தை தமிழகத்திலும் ‘தப்பு’ என்ற பெயரில் அழைக்கும் வழக்கு இன்றும் உண்டு என தமிழகத்தைச் சேர்ந்த புலமையாளர் ஒருவர் இது குறித்த உரையாடல் ஒன்றில் என்னிடம் தெரிவித்தார். அதேநேரம் அதனை பறை எனவும் அழைப்பதுண்டெனவும், அண்மைக்காலத்தில் அதனைப் பறையென அழைக்கும் மரபு அதிகரித்து உள்ளது எனவும் இன்னொரு தமிழக நண்பர் கூறினார். இந்தப் பெயரிடல் விவகாரத்தை ஒருபுறம் வைத்துவிட்டு, ஈழப் பின்னணியில் ‘தமிழகப் பறையை’ (அல்லது தப்பு வாத்தியம் எனவும் அழைக்கப்படுவதை) எந்த விழிப்புமற்று ஈழத்தில் உள்வாங்குகையில் ஏற்படும் பண்பாட்டு நெருக்கடி பற்றியதே இக்கட்டுரை.